17 May 2014

5 ஆண்டுகளில் பேஸ்புக் மறைந்துவிடும் : அதிர்ச்சி ரிப்போர்ட்


 சமூக இணையதளமான பேஸ்புக் இல்லாத ஒரு உலகத்தை தற்போது நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு நவீன இளைஞர்களின் இதயத் துடிப்பாகவே பேஸ்புக் ஆகிவிட்டது. இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் பேஸ்புக்கில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இத்தகைய பேஸ்புக் அடுத்த 5 அல்லது 8 ஆண்டுகளில் காணாமல் போய்விடும் என 'அயன் பயர் கேப்பிடல்’ நிறுவனர் எரிக் ஜாக்சன் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய ஜாக்சன், ’’yahoo இணையதளத்தைப் போல் பேஸ்புக்கும் அடுத்த 5 அல்லது 8 ஆண்டுகளில் மறைந்துவிடும்.

கடந்த 2000-ம் ஆண்டில் கிடைத்து வந்த வருமானத்தில் 10 சதவீதம் மட்டுமே yahoo நிறுவனத்திற்கு தற்போது கிடைத்து வருகிறது.

எல்லா விதத்திலும் yahoo மறைந்துவிட்டது. தகவல் பரிமாற்றத்தின் முதல் தலைமுறையாக yahoo விளங்கியது.

இரண்டாவது தலைமுறையாக பேஸ்புக் தற்போது விளங்கி வருகிறது.

ஆனால் அடுத்ததாக வரும் மூன்றாவது தலைமுறையில் அனைத்திற்கும் மாற்றாக செல்போன் மட்டுமே இருக்கும். பிப்ரவரி மாத அறிக்கையின்படி 50 சதவீத உபயோகிப்பாளர்கள், பேஸ்புக் சேவையை செல்போன் மூலமாகவே பெற்று வருகிறார்கள்.

எனவே 850 மில்லியன் மக்கள் பேஸ்புக்கை உபயோகித்து வந்தாலும், அந்நிறுவனம் பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியாது’ என எச்சரித்துள்ளார்.

மேலும், 'உலகிலிருந்து பேஸ்புக் மறையப் போவதை தடுப்பதற்காக, அதன் நிறுவனர்கள் நிறைய செல்போன் நிறுவனங்கள் நடத்தி அதன்மூலம் பேஸ்புக் சேவையை தொடர நினைக்கலாம்.

ஆனால் செல்போன் நிறுவனத்தை நடத்துவதற்கும், இணையதள நிறுவனத்தை நடத்துவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. எவ்வாறு கூகுள் நிறுவனம், சமூக இணையதளமாக மாற மிகவும் போராடியதோ, அதேபோல சமூக இணையதளமான பேஸ்புக், தன்னை செல்போன் நிறுவனமாக மாற்றிக்கொள்ள மிகவும் போராட வேண்டி இருக்கும்’ என ஜாக்சன் கூறியுள்ளார்



No comments:

Post a Comment