02 July 2013

உங்களால் முடியும் - படியுங்கள்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) இரண்டாம் தாளில் 15௦-க்கு 12௦ மதிப்பெண்கள் பெற்று, சமூக அறிவியல் பாடப்பிரிவில், மாநில அளவில் முதலிடம் பிடித்த, தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த சபீதா, தற்போது கம்பம், மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகி வருபவர்களுக்காக அவர் வழங்கிய டிப்ஸ் இதோ...
 


“முதல் தாளாக இருந்தாலும் சரி, இரண்டாம் தாளாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே அரசின் பாடப்புத்தகங்களை யாரெல்லாம் முழுமையாகப் படித்துக் கொள்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவது நிச்சயம். முதல் தாளுக்காக படித்துக் கொண்டிருப்பவர்கள், ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை ஒரு வரி விடாமல் முழுமையாகப் படித்துக் கொள்ள வேண்டும். இப்பாடங்கள் எல்லாம் குழந்தைகள் படிக்கும் பாடங்கள் என்பதால், படிப்பதில் சிரமம் ஏதும் இருக்காது. புரிந்து கொண்டு, குழந்தைகளைப் போல் மகிழ்ச்சியாக படித்துக்கொண்டாலே, பாடங்கள் அனைத்தும் மனதில் பசுமரத்தாணி போல் பதியும். முக்கியமான வாக்கியங்களை, வார்த்தைகளை தனியே குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பாடத்திலிருந்தும் இதுபோல குறிப்பெடுத்து வைத்துக்கொண்டால், உங்களுக்கென்று தனி நோட்ஸ் தயார். அதை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டால். எளிதில் மறக்காது. எப்போதும் மறந்து போகாது. டீச்சர் டிரெயினிங்கின்போது, படித்துக்கொண்ட சைக்காலஜி பாடங்களை மீண்டும் படித்துக்கொள்ளுங்கள். முதல் தாளை வெற்றிகரமாக எழுதி விடலாம்.


இரண்டாம் தாளுக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்கள் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பாடப் புத்தகங்களையும் முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும். பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை ஓரளவு பார்த்துக் கொள்வதும் பலன் தரும்.

தமிழ் பாடத்தைப் பொருத்தவரை, இலக்கணத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்க வாய்ப்புள்ளது.  வேர்ச் சொல், வினைச்சொல், குற்றியலிகரம், குற்றியலுகரம் போன்றவற்றைப் படித்துக்கொள்ள வேண்டும். செய்யுள் எழுதிய ஆசிரியர்கள் பெயர், அடைமொழிகள் போன்றவற்றைப் படித்துக்கொள்ள வேண்டும். பாடலின் வரியைக் கொடுத்து, இப்பாடலை எழுதியவர் யார் என்றும் கூட கேட்பார்கள். உரைநடைப்பகுதிகள், துணைப்பாடக் கதைகள் போன்றவற்றையும் படித்துக் கொள்ளுங்கள். கதை எழுதிய ஆசிரியர் யார்? இந்த ஆசிரியர் எழுதிய கதை பெயர் என்ன என்றும் கேட்க வாய்ப்புண்டு. தமிழ் எண்கள் பற்றி படித்துக்கொள்ளுங்கள்.

ஆங்கிலப் பாடத்தைப் பொருத்தவரை, பாடல் எழுதிய ஆசிரியர்கள் பெயர், அவர்கள் எழுதிய நூல்கள் போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்பார்கள். பாடத்தின் பின்புறம் உள்ள பொருள் தருக, எதிர்ச்சொல், முன் சேர்க்கும் சொல், பின் சேர்க்கும் சொல் போன்றவற்றைப் படித்துக்கொள்ளுங்கள். அடிப்படை இலக்கணத்திலிருந்து கேள்விகள் கேட்பார்கள்.

குழந்தைகள் மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் பாடத்தைப் பொருத்தவரை பி.எட். படித்தபோது இருக்கும் புத்தகத்தைப் படித்துக்கொள்ளுங்கள். ஒரு சூழ்நிலையைக் கொடுத்து, நீங்கள் அந்நிலையில் என்ன செய்வீர்கள் என்பது போலவும் கேள்விகள் கேட்பார்கள். அதற்கு தர்க்க ரீதியாக சிந்தித்து பதிலளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.சைக்காலஜி பாடங்களில் உள்ள கோட்பாடுகள், அதை வரையறுத்துச் சொன்ன ஆசிரியர்கள் போன்றவற்றைப் படித்துக்கொள்ளுங்கள்.

ஆறு முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் பாடங்களை ஒருவரிவிடாமல் தரவாகப் படித்துக் கொள்ள வேண்டும். 11, 12-ஆம் வகுப்புப் பாடங்களை ஓரளவு பார்த்துக்கொள்ள வேண்டும். வரலாறு என்பது நம் முன்னோர்களைப் பற்றிய பாடம் ஆகும். ஆதலால், விருப்பத்தோடு, புரிந்து கொண்டு படிக்க வேண்டியது அவசியம். கலிங்கப்போர் நடைபெற்ற ஆண்டு? முதலாம் பானிபட் போர் யார் யாருக்கு இடையே நடந்தது?  என்று கேள்விகள் அமையும். ஆகவே, முக்கியமான போர்கள் நடைபெற்ற ஆண்டு, யார் யாருக்கு இடையே நடைபெற்றது, அதன் விளைவுகள் என்ன? போன்றவற்றையெல்லாம் தனியே எழுதி வைத்துக் கொண்டுகூட படிக்கலாம். இப்படிப் படித்தால் போதும்.

செய்தித்தாள்கள், வார இதழ்கள் போன்றவற்றில் வருகின்ற டெட் மாதிரி வினாக்களைப் படித்துக் கொள்ளலாம். அதுவும் நமக்கு தேர்வு நேரத்தில் உதவும்.

அரசு வழங்கியிருக்கும் பாடப் புத்தகங்களை புரிந்துகொண்டு முழுமையாகப் படித்தாலே போதும், தேர்வில் வெற்று பெற்றுவிடலாம். இதற்காக கைடும் தேவையில்லை. பயிற்சி வகுப்பும் தேவையில்லை. உங்களால் முடியும் என்று நம்பிப் படியுங்கள், வெற்றி உங்களுக்கே!

- புதிய தலைமுறை இதழில் 



No comments:

Post a Comment